பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
திருநெல்வேலி:தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது.தென் திருப்பதி என்றழைக்கப்படும் மேலத் திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் 97ம் ஆண்டிற்கு பிறகு பல லட்ச ரூபாய் செலவில் உபயதாரர்கள் மூலம் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி அணுக்கை, விஸ்வக்ஸேநாராதனம், புண்யாகவாஜனம், அக்னிபிரதிஷ்டை, அகல்மஷ சாந்தி ஹோமம், வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி, திருவாராதனம் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து யஜமான வர்ணம், ஆசார்யவர்ணம், ஸபா அனுக்கை, புண்யாகவாஜனம், விஷேச ஆராதனம், பகவத் பிரார்த்தனை, ம்ருத்சங்கிரஹணம், சப்தநதி பூஜை, தீர்த்த சங்கரஹணம், அங்குரார்ப்பணம், யாகசாலா அக்னிபிரதிஷ்டை, கும்ப பூஜை, கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், ரக்ஷாபந்தனம், உக்தஹோமம், பூர்ணாஹூதி, திருவாராதனம், வேதபாராயணம், பிரபந்தம் சாற்றுமுறை கோஷ்டி நடந்தது. நேற்று காலை புண்யாகவாஜனம், 7 திரவியங்களால் 7 பேர் அமர்ந்து மகாசாந்தி ஹோமம், கும்ப நியாஸங்கள், பஞ்சகவ்யங்களால் பிம்ப சுத்தி, அக்னிமோஜனம் (கண் திறப்பு), ஹோமம், பூர்ணாஹூதி, வேதபாராயணம், பிரபந்தம் சாற்றுமுறை கோஷ்டி, பிரசாத விநியோகம் நடந்தது.மாலையில் உற்சவர் திருமஞ்சனம், மகாசாந்தி, கும்ப அபிஷேகம், சயனாதிவாஸம், தேவதா அழைப்பு, பிரதான மூர்த்திகள் ஹோமம், பிரதான ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, பிரசாத விநியோகம் நடந்தது.
யாகசாலை பூஜையில் திருப்பதி சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டார். துணை ஆணையர் முத்துதியாகராஜன், திருப்பணிக்குழு தலைவர் ஆடிட்டர் ஸ்ரீதர், துணைத்தலைவர் டி.எஸ்.சாரங்கபாணி, செயலாளர் எஸ்.வி.எஸ்.மணியன், பொருளாளர் சங்கரநாராயணன், இணைச் செயலாளர் சீனிவாசன், டிரான்ஸ்வேர்ல்டு நிறுவன சேர்மன் ஸ்ரீராமகிருஷ்ணன், சென்னை தொழிலதிபர் நந்தனம் சீனிவாசன், சுந்தர்ராஜன், அசோக் ராமச்சந்திரன், லெட்சுமணன், அம்மன் சன்னதி காசிவிஸ்வநாதன், தென்காசி நீலகண்டன், கோடீஸ்வரன் ஜூவல்லர்ஸ் மணி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று கும்பாபிஷேகம்: கும்பாபிஷேக விழாவான இன்று காலை 5 மணிக்கு புண்யாகவாஜனம், அந்த ஹோமம், பூர்ணாஹூதி, யாத்ரா தானம், அக்னி சமாரோபணம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 9.16 மணி முதல் 9.45 மணிக்குள் பூமிநீளா அலமேலு மங்கா சமேத திருவேங்கடமுடையான் சன்னதி விமானங்கள், ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.45 மணிக்கு மூர்த்திகள் மூலவர் பிரதிஷ்டை, விஷேச ஆராதனம், பிரம்ம கோஷம், வேதபிரபந்த சாற்றுமுறை, ஆச்சார்ய மரியாதை, யஜமான மரியாதை, பிரசாத விநியோகம் நடக்கிறது.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.கும்பாபிஷேகத்தை திருக்குறுங்குடி நம்பிகோயில் பரம்பரை அர்ச்சகர் கோவிந்த பட்டாச்சாரியார் குழுவினர், அர்ச்சகர்கள் பத்மபநாப பட்டாச்சார், சீனிவாச பட்டாச்சார், நாராயண பட்டாச்சார் நடத்துகின்றனர். கும்பாபிஷேக விழாவில் வானமாமலை மடாதிபதி 30வது பட்டம் கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள், திருப்பதி சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இணை ஆணையர் சுதர்ஸன் கலந்து கொள்கின்றனர். இரவு 7 மணிக்கு கருடசேவை நடக்கிறது.ஏற்பாடுகளை தென் திருப்பதி திருவேங்கடமுடையான் கைங்கர்ய சபாவினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.