பதிவு செய்த நாள்
26
செப்
2018
01:09
திருச்சி: திருச்சி, மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவின், 13ம் நாளான நேற்று, (செப்., 25ல்) உற்சவ விநாயகருக்கு, 27 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதி உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று, மலைக்கோட்டையில் எழுந்தருளி யுள்ள உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும், 150 கிலோ எடையில் பிரம் மாண்ட கொழுக்கட்டை படையல் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில், கடந்த, 13 தொடங்கி, உற்சவ விநாயகர் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார்.
13ம் நாளான நேற்று (செப்.,25ல்), மாணிக்க விநாயகர் கோவிலில், மூலவர், உற்சவருக்கு விபூதி, சந்தனம், திரவியப் பொடி, அரிசி மாவு, நெல்லி முல்லிப் பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், கரும்புச்சாறு, இளநீர், பன்னீர் மற்றும் பழ வகைகள் என, 27 வகைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, (செப்., 26ல்) சிறப்பு அபிஷேகம் லட்சார்ச்சனையுடன், விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.