பதிவு செய்த நாள்
26
செப்
2018
03:09
அனுப்பர்பாளையம்: அடுத்தாண்டு துவக்கத்தில் காலேஜ் ரோடு, கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. திருப்பூர், காலேஜ் ரோட்டில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்ளது. இங்கு, பக்தர்கள் நலன் சார்ந்த பணிகளை, மக்கள் நல அறக்கட்டளை செய்து வருகிறது.
அதன் தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி கூறியதாவது; மொத்தம், 5.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவிலை சுற்றி, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. கோவில் முன் பகுதியில் கல் தரை, குடிநீர், கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உள் மண்டபத்தில், மார்பிள் கற்களால் தரையும், அதை சுற்றி கல் தரை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பக்தர்கள் கிரிவலம் செல்ல, கோவிலை சுற்றி, 500 மீ., துாரத்திற்கு, கான்கிரீட் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டு, இரு புறமும் மரக்கன்று நடப்பட்டு, ஆங்காங்கே, இருக்கை அமைக்கப்பட உள்ளது. கிரிவலப்பாதை அமைக்கும் பணி, அடுத்த மாதம் நிறைவு பெறும். பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளது. அரசின் அனுமதி பெற்று, அடுத்தாண்டு, ஜனவரியில், கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.