பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா ஜனவரி 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. சென்னிமலை மலைக்கு மேல் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர் பெருவிழா 15 நாட்கள் நடக்கும். இம்மலையில் தான் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்துள்ளது. பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்திருவிழா நடப்பதுபோல, இங்கும் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், இரவு 9 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும் நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது. நாளை அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்குள் மகர லக்னத்தில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8ம் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. 9ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சியும், பத்தாம் தேதி இரவு தெப்போற்சவமும், பூத வாகன காட்சியும் நடக்கிறது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனம் 11ம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. மகாதரிசனம் அன்று நடராஜபெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. அன்று சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 12ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. தினமும் இரவில் பல்வேறு இசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் தனபாலன், கோவில் செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்கின்றனர்.