பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
சேலம் : சேலம் கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலில், பஞ்ச கருட சேவையை ஒட்டி, நேற்று நடந்த திருக்கல்யாண மஹோத்ஸவத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம், கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலில் பஞ்ச கருட சேவை, கடந்த 3ம் தேதி விசேஷ திருமஞ்சனத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பெருமாள், ஆண்டாள் உற்சவ மூர்த்திகளுக்கு தங்க கவசம், மூலவர் பெருமாளுக்கு முத்தங்கி சாத்துப்படி நடந்தது. ஃபிப்.,4ம் தேதி பெருமாள், ஆண்டாள் சீர் வரிசைகளுடன் உள்புறப்பாடு, வாங் நிச்சயம், தீபாராதனை, சாற்றுமுறை ஆகியன நடத்தப்பட்டு தீர்த்தபிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று காலையில் நவகலச ஸ்தபநதிருமஞ்ஜனம், நீராட்டம், கட்டியம் சேவித்தல் ஆகியன நடந்தது. மேலும் ஸ்வாமி மற்றும் தாயாருக்கு திருக்கல்யாண விசேஷ அலங்காரம், உள் புறப்பாடு, மாலை மாற்றுதல் ஆகியன நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண சீர்வரிசையுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் இருந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலையை அழகிரிநாத பெருமாளுக்கு சாத்துப்படி செய்யப்பட்டது. கோவிலின் அர்ச்சககர் சுதர்ஸன பட்டாச்சார்யார் தலைமையில், ஸ்ரீனிவாச பட்டாச்சார்யார் முன்னிலையில் நடந்த இத்திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் இருந்து சூடிக்கொடுத்த சுடர் மாலையை ரகுராம் பட்டர் கொண்டு வந்த மாலை அழகிரிநாத பெருமானுக்கு சாத்துப்படி செய்யப்பட்டது. மேலும் திருக்கல்யாண சாற்று முறையும், ஆச்சார்யபஹுமானம், அக்ஷதாசீர்வாதம் மற்றும் அன்னதானம் நடந்தது. மாலையில் ராஜ அலங்காரத்தில் சிறப்பு ஊஞ்சல் சேவை மற்றும் புஷ்பாஞ்சலி ஆகியன நடத்தப்பட்டது. இரவில் பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண கோலத்தில் கிச்சிப்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் திருவீதி உலா கண்டருளினார். திருக்கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.