பதிவு செய்த நாள்
28
செப்
2018
11:09
புதுடில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கு: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு ஆட்சேபனை இல்லை என, கேரள அரசு சமீபத்தில் தெரிவித்தது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
போராட்டம்: இந்த அமர்வில், 4 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு: பல நூற்றாண்டுகளாக பெண்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. பெண்களை கடவுளாக கவுரவிக்கும் நாட்டில் அவர்களை பலவீனமானவர்களாக கருதக்கூடாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான், பெண்கள் காத்திருக்க வேண்டும். மனிதர்களின் பக்தி என்பது, உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக தீர்மானிக்கக்கூடாது. வழிபாட்டு தளங்களில் பாகுபாடு காட்டக்கூடாது. பாலின அடிப்படையில், பொது இடங்களில் பொது மக்கள் செல்ல தடை விதிப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர். இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.