பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
அரூர்: அரூர் அருகே தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா, நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, 1ம் தேதி காலை முதல் மாலை வரை விக்னேஷ்வர பூஜை, தன பூஜை, மகா தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. 3ம் தேதி முதல் கால யாக பூஜையும், நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜையின் நான்காம் கால யோக வேள்வி பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 5.30 மணியளில் மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேக கலசங்களை சிவாச்சாரியர்கள் எடுத்து வந்தனர். காலை 8.30 மணிக்கு மூலவர்-அம்பாள் விமான குட முழுக்கு, பரிவார மூர்த்திகள் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தது. அப்போது, கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில் கோபுர கலசங்களை நோக்கி, "ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்தில் வணங்கினர். கோவில் நிர்வாகம் சார்பில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அன்பழகன், அ.தி.மு.க., மாவட் செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், குப்புசாமி, ஒன்றிய குழு தலைவர் தென்னரசு உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு பரிவாரங்கள் கட்டி வரவேற்பு வழங்கப்பட்டது. விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் திருஞான சம்பந்தர், அ.தி.மு.க., பிரமுகர்கள் வேடியப்பன், ராமகிருஷ்ணன், தீர்த்தகிரி உள்பட சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.