பதிவு செய்த நாள்
01
அக்
2018
12:10
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் 300 ஆண்டு பழமையான மூலிகை ஓவியங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. இக்கோயிலில் பச்சை மரகத நடராஜர் சன்னதி, பிரகார மண்டபம், மங்களேஸ்வரி அம்மன் அர்த்த மண்டபம், முதல் பிரகாரத்தில் உள்ள தபசு மண்டபம் ஆகிய இடங்களில் மூலிகையால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் காண்போரின் மனதை கவர்வதாக அமைந்துள்ளது. கி.பி., 16ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் முத்துவிஜய ரெகுநாத கிழவன் சேதுபதி ஆட்சிகாலத்தில் வரையப்பட்ட இந்த மூலிகை ஓவியம், தற்போது மங்கலாகவும், வண்ணங்கள் நிறம் குறைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு கூறுகையில், சிகப்பு, மஞ்சள், நீலம், கருமை, பச்சை ஆகிய வண்ணங்களை பெற காரை சிவப்பு கற்கள், இண்டிகோ செடி, மூலிகை செடியின் வேர்கள், மரப்பட்டைகள், விதைகள், ஆகியவற்றினை பொடி செய்து, தேவையான தொழில்நுட்ப விஷயத்துடன் கூடிய பார்முலா மூலம் வரையப்பட்டுள்ளது.
மரகத நடராஜரின் சன்னதி முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட 12 ராசிகள், நவ கிரகங்களின் உருவபடத்தின் வரிசைகள், உத்தரகோசமங்கை உருவான ஸ்தல வரலாறு குறித்த விஷயங்களை ஓவிய வடிவில் தீட்டப்பட்டுள்ளது. தபசு மண்டபத்தில் அம்மன், சிவனை அடைய வேண்டி தாம் பட்ட கஷ்டங்கள், தவக்கோலங்கள் இவற்றை பட்டவர்தமாக விளக்குகிறது. உப்பங்காற்று, வாடைக்காற்று, சீதோஷண நிலை இவற்றை பல்வேறு காலகட்டங்களை கடந்து வருகிறது, என்றார். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் உள்ள மூலிகை ஓவியங்களை, பழமை மாறாமல் மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.