சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2018 04:10
திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திருவிதாங்கூர் தேவசம் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர் பத்மகுமார், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளபடி சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் தாமதம் ஆகாது. அதே சமயம், ஒருவேளை கூடுதலாக பெண் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்படும். நிலக்கல் - பம்பை வரை போக்குவரத்தில் பெண் பக்தர்களுக்கு 40 சதவீதம் கூடுதல் வசதி செய்து தரப்படும்.
வசதிகளை விரிவுபடுத்த கூடுதல் அவகாசம் ஆகும். தற்போது சீசன் துவங்க குறுகிய காலமே உள்ளதால் கழிப்பிட வசதி போன்ற வசதிகள் செய்து தரப்படும். விரிவாக்க பணிகளுக்காக 100 ஏக்கர் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். நிலக்கலில் நிலம் ஒதுக்குவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். பெண் பக்தர்களுக்காக தனி வரிசை ஏற்படுத்தப்படாது. அதே சமயம் பெண் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பெண் போலீசார் அமர்த்தப்படுவர். பெண் பக்தர்கள் வரமாட்டார் என்றே நினைக்கிறேன். இருப்பினும் கோர்ட் உத்தரவை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும். தீர்ப்பை எதிர்ப்பு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.