திருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி வேல்மூலம் மலைமீதுள்ள பாறையை கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை உருவாக்கியதை நினைவு கூறும் வகையில் திருப்பரங்குன்றத்தில் மூலவர் கரத்திலுள்ள வேல் மலை மீது கொண்டு செல்லும் விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்கரிக்கப் பட்டது.
சிறப்பு பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப் பட்டது. பல்லக்கில் வேல் வீதி உலா சென்று மலை மீது கொண்டு செல்லப்பட்டு, சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை முடிந்து, சிவாச்சார்யார்கள் வேலுக்கு சுனை தீர்த்தத்தில் 16 வகை திரவிய அபிஷேகம் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 150 படி அரிசியினாலான கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. பின் மாலையில் வேல் புறப்பாடாகி, அடிவார பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு அபிஷேகம் முடிந்து பூப்பல்லக்கில் வீதி உலா சென்று மூலவர் கரத்தில் சேர்க்கப்பட்டது.