பதிவு செய்த நாள்
09
அக்
2018
11:10
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் மழை தொடர்ந்து அச்சுறுத்திய நிலையிலும் வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை செய்தனர். அன்று இரவு 11.30 மணிக்கு வாத்தியங்கள் முழுங்க சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த ஊஞ்சல் தாலாட்டில், கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமிவந்து ஆடினர்.
இதில் திண்டிவனம் மாவட்ட உரிமையியல் கூடுதல் நீதிபதி அருணாச்சலம், இந்து சமய உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் பிரகாஷ், திருவண்ணாமலை மோகனசுந்தரம் மற்றும் அறங்காவலர்கள் காவலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, புதுச்சேரி, கடலுார், வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். நேற்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் இருந்தது. அத்துடன், பல இடங்களிலும் விட்டு விட்டு பரவலாக மழை பொழிந்தது. இரவு 8 மணியளவில் மேல்மலையனுாரிலும் லேசான மழை இருந்தது. இருந்தும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் வழக்கம் போல் லட்சக்கணக்கில் வந்திருந்தனர்.