பதிவு செய்த நாள்
09
அக்
2018
11:10
ராமேஸ்வரம்: விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து தாமிரபரணி மகா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை துவக்கப்பட்டது. 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழா அக்.11 முதல் அக்.22 வரை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான வட,தென் மாநில பக்தர்கள், சாதுக்கள் பங்கேற்பார்கள்.
புஷ்கர விழாவுக்கு தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து அக்னி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தத்தை விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் இரு புனித கலசத்தில் சேகரித்தனர்.பின் அலங்கரித்த தாமிரபரணி மகா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை வாகனத்தில் வைத்து மகா தீபாராதனை முடிந்ததும், ரதம் புறப்பட்டு சென்றது. இந்த ரதம் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை வழியாக நெல்லை தாமிரபரணிக்கு செல்ல உள்ளது. ரதம் புறப்பாட்டில் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடம் நிர்வாகி சுவாமி நியமானந்தா, பா.ஜ.க.,மாவட்ட தலைவர் முரளிதரன், விஸ்வ இந்து பரிஷத் மாநில இணை செயலர் சத்தியமூர்த்தி, இந்து முன்னணி நிர்வாகிகள் ஆடல் அரசன், ராமமூர்த்தி, தில்லைபாக்கியம் பங்கேற்றனர்.