பதிவு செய்த நாள்
10
அக்
2018
10:10
கோவை: சபரிமலை செல்வதற்கு, குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதியில்லை என்று, 200 ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகள் வெளியிட்ட ஆவணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அனைத்து வயது பெண்களும், சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பு, கடந்த பத்து நாட்களாக, அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ள சூழலில், 200 ஆண்டுக்கு முன்பிருந்த சபரிமலை கோவில் நடைமுறை குறித்து, பிரிட்டீஷாரின் ஆவணம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது, தெரியவந்துள்ளது.
கடந்த, 1818ல் பதிவு செய்யப்பட்ட இந்த ஆங்கிலேய சாசன புத்தகத்தை வைத்துள்ள, கோவை முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:பிரிட்டிஷ் ஆட்சிக்காலமான, 1816ல் பெஞ்சமின் ஸ்வைன் வார்டு; பீட்டர் அயர் கானர் எனும் இரு ஆங்கிலேய ஆய்வாளர்கள், திருவிதாங்கூர், கொச்சி மாகாணங்களில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கள ஆய்வு செய்து, அங்குள்ள மக்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளனர். அதில், சபரிமலை குறித்தும், 136-137 பக்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.புத்தகத்தில் இடம் பெற்ற குறிப்புதிருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பெருநாடு நிலக்கல் பகுதியிலிருந்து வடகிழக்கில், ஐந்தரை மைல் தொலைவில் சின்னஞ்சிறு கோவிலாக சபரிமலை உள்ளது.கோவிலில் பளிங்குக்கற்களாலான, 18 படிகள் உள்ளன; 150 அடி சதுர அடியில் சுற்றிலும் உறுதியான சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
செம்புத்தகடுகளால் வேயப்பட்ட சிறிய கோவிலில், ஆண்டுக்கு ஒரு முறை ஜன., மாதம் 5 நாட்களுக்கு விழா நடக்கிறது. இந்தியாவின் தொலைதுார பகுதிகளில் இருந்தெல்லாம், பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். 10 முதல் 15 ஆயிரம் பேர் வரை வருகின்றனர்.இங்கு வழிபடுவதன் மூலம் வியாதிகள் குணமாவதாக நம்பிக்கையும் மக்களிடம் இருக்கிறது. பல்வேறு வேண்டுதலுக்காக பிரார்த்தனை செய்து படிகளின் கீழ் காணிக்கைகளை மக்கள் செலுத்துகின்றனர். இக்கோவிலுக்கு செல்வதற்கு, சிறு வயது பெண்களுக்கும், வயது முதிர்ந்த பெண்களுக்கும் தடையில்லை. ஆனால், பூப்பெய்த பெண்கள், வயது முதிரும் வரை இக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. ஏனெனில், இந்த கடவுள் பிரம்மச்சாரி. பக்தர்களும், அதேபோல், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்து வருகிறது.கடந்த, 1818ல் எழுதப்பட்ட,Memoir of the Survey of the Travancore and Cochin States என்ற இந்த குறிப்புகள், நுாலாக வெளியிடப்பட்டுள்ளன. கேரள அரசு இதை அங்கீகரித்து முக்கிய சாசனமாக ஏற்றுக்கொண்டுள்ளது.இவ்வாறு, ஹரிஹரன் தெரிவித்தார்.