பதிவு செய்த நாள்
12
அக்
2018
12:10
செஞ்சி, செஞ்சி அருகே, ஜெயின் கோவிலில் திருடப்பட்ட, நான்கு சிலைகள், காப்பு காட்டில் கிடந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, பெரும்புகையில், 1,000 ஆண்டுகள் பழமையான மல்லிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 40க்கும் மேற்பட்ட பழமையான சிலைகள் இருந்தன. இதில், பெரும்பாலானவை வெண்கலம் மற்றும் பித்தளை சிலைகள். ஐம்பொன் சிலைகள் குறைந்த அளவில் இருந்துள்ளன.
கோவில் நிர்வாகத்தினர், சிலைகளுக்கான பதிவேடுகளை பராமரிக்காமல் இருந்தனர். கடந்த மாதம், 15ம் தேதி இரவு கோவிலின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகள் சிலவற்றை திருடிச் சென்றனர். சரியான கணக்கு இல்லாததால், எந்தனை சிலைகள் திருடு போனது என்பதை, கோவில் நிர்வாகத்தினரால் உறுதி செய்ய முடியவில்லை. இதையடுத்து, மல்லிநாதர் சிலைகள் இரண்டு, தரனேந்திரர், பத்மாவதி, ஜோலாமாலினி ஆகிய மூன்று சிலைகள் என ஐந்து சிலைகள் திருடு போனதாக, செஞ்சி போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் பதிவு செய்த பிறகு, மேலும், பார்சுவநாதர் சிலை ஒன்றும் காணவில்லை என தெரிவித்திருந்தனர்.
திருடு போன சிலைகளை கண்டு பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே நேற்று காலை, 8:00 மணிக்கு, செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள காரை காப்பு காட்டில், சாக்கு பைக்குள் நான்கு சுவாமி சிலைகள் கிடந்துள்ளன.
அவ்வழியே சென்ற, சிட்டாம்பூண்டியை சேர்ந்த சுரேஷ், 30 என்பவர், அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சிலைகளை கைப்பற்றி, செஞ்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.அதில், மல்லிநாதர், பார்சுவநாதர், பாவை விளக்கு உட்பட நான்கு சிலைகள் இருந்தன. இவற்றை பார்வையிட்ட, கோவில் நிர்வாகிகள் திருடு போன ஆறு சிலைகளில் மல்லிநாதர் சிலை மட்டும் உள்ளது. மற்ற ஐந்து சிலைகள் இல்லை என தெரிவித்தனர். இந்நிலையில், மற்ற மூன்று சிலைகளையும் சேர்த்து, திருடு போனது ஒன்பது சிலைகள் என தெரிய வந்துள்ளது. திருடு போன, இரண்டு மல்லி நாதர் சிலைகளில் ஒன்று, 700 ஆண்டுகள் பழமையானது. மற்றொன்று, 2008ல் செய்த சிலை. சிலையை திருடிச் சென்றவர்கள், புதிய மல்லிநாதர் சிலை உள்ளிட்ட நான்கு சிலைகளையும் அறுத்து பார்த்து சோதித்துள்ளனர். அவை குறைந்த மதிப்புடையவை என்பதால், காட்டில் வீசி சென்று இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. ஐம்பொன் சிலைகளை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து, டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘சிலை திருட்டு குறித்து, தீவிர விசாரணை நடத்து வருகிறது. குற்றவாளிகள் என சந்தேகப்படுபவர்களின் பட்டியல் உள்ளது. குற்றவாளிகளை விரைவில் பிடித்து, சிலைகள் மீட்கப்படும்,’’ என்றார்.