பதிவு செய்த நாள்
14
அக்
2018
01:10
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், ராஜகோபுர வாசல் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுடன் இணைந்த, வடபத்ரசயனர் கோவிலின் ராஜகோபுரம், தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ளது.பல ஆண்டுகளுக்குமுன், குண்டு மிரட்டல் காரணமாக, ராஜகோபுரம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டனர். ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்ல, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்து சமய ஆகமவிதிப்படி, ராஜகோபுரத்தின் வழியாக தான் கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். இதை வலியுறுத்தி, இந்து அமைப்புகள், ஏழு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன.இந்நிலையில், ராம்கோ நிறுவனம் சார்பில், 4 லட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுர வாசல், ஆண்டாள் கோவில் நுழைவு வாசலில், நவீன மெட்டல் டிடெக்டர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு கோவில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் வாசல் திறக்கப்பட்டு, ராஜகோபுரம் பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.