பதிவு செய்த நாள்
16
அக்
2018
12:10
கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந் நிலையில், சபரிமலைக்கு செல்வதற்காக, மாலையணிந்து விரதம் மேற்கொண்டுள்ள, கண்ணுாரைச் சேர்ந்த ஆசிரியை, ரேஷ்மா, எந்த எதிர்ப்பு வந்தாலும் சபரிமலை செல்வேன், என, கூறியுள்ளார்.
பதற்றமான சூழ்நிலை : கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்கு, 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.இது தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, கேரளா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, நாளை திறக்கப்பட உள்ளது. இதனால், சபரிமலையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணுாரைச் சேர்ந்த, ஆசிரியை, ரேஷ்மா நிஷாந்த், 32, பேஸ்புக் சமூக வலைதளத்தில், ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
பேஸ்புக்அதில் அவர் கூறியுள்ளதாவது:சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக, மாலையணிந்து, 41 நாட்கள் விரதத்தை துவக்கியுள்ளேன். எந்த தடை ஏற்பட்டாலும், சபரி மலைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன்.புரட்சி செய்வதற்காகவோ அல்லது விளம்பரம் தேடுவதற்காகவோ, இதைச் செய்யவில்லை; எதிலும் ஒரு துவக்கம் தேவை.இன்று நாம் செய்தால், அது எதிர்காலத்தில் பலருக்கும் உந்துதலாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே, சபரிமலைக்கு செல்வது குறித்து பேஸ்புக்கில் பதிவு செய்தேன்.ஆனால், என் பதிவுக்கு, பலர் மிரட்டலாக, ஆபாசமாக பதில் பதிவு செய்துள்ளனர். பல அமைப்பைச் சேர்ந்தவர்கள், என் வீட்டு முன் குவிந்து, மிரட்டும் வகையில் கோஷமிடுகின்றனர்.பல்வேறு தரப்பில் இருந்தும், சபரிமலைக்கு செல்லக் கூடாது என, எச்சரிக்கை வருகிறது. இருந்தாலும், சபரிமலைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன்; 18 படிகளில் ஏறிச் செல்வேன்.41 நாட்கள் விரதம்நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது போன்றது தான், மாதவிடாய் காலமும். அதனால், எவ்வித மன உறுத்தலும் இல்லாமல், 41 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு செல்ல உள்ளேன். என் கணவர், நிஷாந்த் பாபு, கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கிறார். என்னுடன், அவரும் சபரிமலைக்கு வருகிறார். எங்களின், 5 வயது மகளும் வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.