பதிவு செய்த நாள்
19
அக்
2018
11:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலாமாத பிறப்பு தீர்த்தவாரியையொட்டி காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி னால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கி வருகிறது. இத்தகைய பெருமைமிக்க துலா உற்சவம் மயிலாடு துறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் நேற்று ஐப்பசி (துலா மாதம் )மாதம் பிறப்பை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூர நாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி ஆகிய சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காவிரி துலாக்கட்டத்தின் இரு கரைகளிலும் எழுந்தருளின. காவிரிக் கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாணதம்பிரான் சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தீர்த்தம்கொடுக்க காவிரியில் புனிதநீராடின ர். இதில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் நவம்பர் 7ம்தேதி அமாவாசை தீர்த்தவாரியும், திருக்கொடியேற்றமும், 13ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி திருத்தேரோட்டமும், நவ ம்பர் 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.