பதிவு செய்த நாள்
20
அக்
2018
11:10
சிவகங்கை: சிவகங்கை நகரத்தாருக்கு சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே பூர்வீகமாக இருந்தது. சில காரணங்களால் பாண்டிய நாட்டில் குடியேறினர். முதலில் 96 ஊர்களில் குடியேறினர். காலப்போக்கில் 76 ஆக சுருங்கியது.
தற்போது சிவகங்கை மாவட்டத்தில் 56 ஊர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஊர்களில் வசிக்கின்றனர். இப்பகுதிகளே செட்டிநாடு என, அழைக்கப்படுகிறது.செட்டிநாடு வீடு, சமையல், உறவுமுறை, கலைப்பொருட்கள் என, அனைத்திலும் தனித்துவமாக திகழ்ந்தனர். இவர்களது வீடுகள் கட்டட கலைக்கு பெயர்பெற்றவை.
இன்றும் பாரம்பரிய சின்னங்களாக விளங்குகின்றன. அதேபோல் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் கலைநயம் இருக்க வேண்டுமென, விரும்பினர். ஓலைக் கொட்டான், பீங்கான் சாமான்கள் மட்டுமின்றி உலோகப் பொருட்களிலும் கலையை புகுத்தினர். வெற்றிலை பாக்கு போட தேவையான பொருட்களை வைக்க கூட உலோகத்தால் ஆன சுண்ணாம்புக் கரண்டகம், அலங்காரத் தட்டு, பாக்குவெட்டியை பயன்படுத்தினர்.தண்ணீர் குடிக்கும் செம்பு, தலை வார சீப்பு, பூஜைக்கான தூபக்கால், கிண்டி, குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை கூட கலைநயமிகுந்த உலோகப் பொருட்களை பயன்படுத்தினர்.
சிவகங்கை அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்ரிசாமி கூறியதாவது: நகரத்தார் எந்த பொருளிலும் கலைநயத்தை விரும்பினர். செட்டிநாடு கலைகள் குடும்பத்தை ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது. கலைப் பொருட்களுக்காகவே வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்தனர். திருமணத்தில் அவற்றை சீதனமாக கொடுத்தனர். நாகரிக வளர்ச்சியால் செட்டிநாடு கலை அழிந்து வருகிறது, என்றார்.