பதிவு செய்த நாள்
20
அக்
2018
11:10
ஐப்பசி சதயம்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் அடுத்தடுத்த நட்சத்திரத்தில் தொண்டை மண்டலத்தில் அவதரித்தவர்கள். -அத்தியூர் என்றழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் திருவெஃகா, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலுக்கு அருகிலுள்ள பொய்கையில் தாமரை மலர் ஒன்றில், ஐப்பசி மாதம் திருவோண திருநஷத்திரத்தில், பெருமாளின் பாஞ்சஜன்ய சங்கின் அம்சமாக தோன்றினார் -பொய்கையாழ்வார்.
கடல்மல்லை என்றழைக்கப்படும் மாமல்லபுரத்தில் மாதவி மலர் ஒன்றில், ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில், பெருமாளின் கௌமோதகீ கதையின் அம்சமாக தோன்றினார் - பூதத்தாழ்வார்.
மயிலை கேசவப் பெருமாள் கிணற்றில், செவ்வல்லி மலரொன்றில், ஐப்பசி மாதம் சதயத் நட்சத்திரத்தில், பெருமாளின் நந்தகம் எனும் வாளின் அம்சமாக தோன்றினார்- பேயாழ்வார். இவர்கள் மூவரும் சமகாலத்தவர்களாக இருந்தபோதிலும், தங்களுக்குள் அறிமுகம் இல்லாமல் இருந்தனர். திருமால் நெறிபரப்பிய இம்மூவரையும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க திருவுள்ளம் கொண்டார். திருக்கோவிலூர் செல்லவேண்டும் என்ற அவாவினை மூவருக்கும் தோற்றுவித்தார் எம்பெருமான். திருப்பதியாகிய திருக்கோவிலூரை அடைந்தார் பொய்கையார். அங்கு மிருகண்டு மூனிவரின் ஆஸ்ரமத்தில் சிறிய இடைக்கழியில் படுத்துக் கொண்டிருந்தார். பூதத்தாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் என்றார் பொய்கையார். அவ்வாறே இருவரும் இருந்தனர். பேயாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். அவரை இவ்விரு ஆழ்வார்களும் வரவேற்று, இங்கு இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்றனர். அவ்வாறே மூவரும் அச்சிறு இடைக்கழியில் நின்றபடி எம்பெருமான் குணாணுபவங்களை பேசிக் கொண்டிருந்தனர்!
அப்போது திருக்கோவிலூர் திருவிக்கிரமப் பெருமான் பெருமழையும், காற்றும் ஏற்படுத்தி, ஆழ்வார்கள் அறியாவண்ணம் தானும் இடைக்கழியில் புகுந்து நெருக்கமுண்டாகச் செய்தார்.
எதிர்பாராத நெருக்கம் ஏன் ஏற்பட்டது என்பதை உணர்ந்த ஆழ்வார்கள் மூவரும் எம்பெருமானின் பெருமையை நூறு-நூறு- நூறு பாசுரங்களாக அந்தாதி முறையில் பாடினர். இதுவே நாலாயிர திவ்யபிரந்தத்தில் முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி மற்றும் மூன்றாம் திருவந்தாதி என்பதாகும். பிறகு மூவருக்கும் அப்போது தோன்றிய வெளிச்சத்தில் பெருமானின் திருக்கோலம் புலப்பட்டது. மற்ற ஆழ்வார்களுக்கு முன்தோன்றி வாழ்ந்து அவர்களின் நன்னெறிக்கே வித்திட்டதால், இம்மூவரையும் "முதலாழ்வார்கள்" என்று போற்றுவர்.
"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்,
அருக்கன் அணிநிறமும் கண்டேன்-
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்,
புரி சங்கம் கைக் கண்டேன் என்னாழி
வண்ணன்பால் இன்று!"
– பேயாழ்வார்