பதிவு செய்த நாள்
20
அக்
2018
12:10
நிலக்கல்:சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்தால் பந்தள ராஜா குடும்பம், சன்னிதானத்தின் மேல்சாந்திகள் சார்பில் கோயிலின் நடையை அடைப்பதே கோயிலின் புனிதம் காக்கும் வழி. இதை உடனே மேற்கொள்ள வேண்டும்,என தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
நிலக்கல் வந்த அவர் கூறியதாவது: நான், தேவசம்போர்டு தலைவராக இருந்தபோது சபரி மலையின் நெறிமுறைகள் மீறப்பட வில்லை. 10 வயதுக்கு உட்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.
தற்போது உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பு மத நம்பிக்கைக்கு எதிரானது. சபரிமலை ஐயப்பன் பிரம்சாரி கோலம் பூண்டவர். அவரை காண ஒரு மண்டலமான 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்து, மலையேறி வருவது பெண் களின் உடலாலும், மனதாலும் இயலாதது. பெண்களை ஐயப்பன் ஆசிர்வதிக்க மாட்டார், என்பதில்லை. அதற்கென வயது வரம்புள்ளது. அதை பெண் பக்தர்கள் மதித்து நடந்து வருகிறார்கள்.
மத நம்பிக்கை மீதுஈடுபாடு அல்லாத பெண்கள் சிலர் சபரிமலை விவகாரத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக திட்ட மிட்டே வருகின்றனர். அதைஐயப்பனும், உண்மை யான பக்தர்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
மறு சீராய்வு மனு
சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்ல அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் உடனே மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதனால் மட்டுமே தற்காலிக மாக போராட்டம் முடிவுக்கு வரும். அதுவரை இந்தாண்டு மண்டல, மகர விளக்கு பூஜைகளில் பெண்களை அனுமதிக்க கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்தால் பந்தள ராஜா குடும்பம், சன்னிதானத்தின் மேல்சாந்திகள் சார்பில் கோயிலின் நடையை அடைத்து கோயிலின் புனிதம் காக்க வேண்டும்.
இதை உடனே மேற்கொள்ள வேண்டும். பெண்களை போலீசார் பாதுகாப்புடன் சன்னிதானம் அழைத்து வருவது வேதனையளிக்கிறது. ஐயப்பன் கோயில் புனிதம் காக்க பெண்கள் வரவேண்டாம், என காலில் விழுந்து அறப்போராட்டம் நடத்தும் பக்தர்களை போலீசார் தாக்குவது கண்டிக்கத்தக்கது.நேற்று முன்தினம் நடந்த மாநில அளவிலான பந்த் முழு வெற்றி அடைந்துள்ளது. அறவழியில் போராட்டம் நடத்தும் பக்தர்களுக்கு போலீசார் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்றார்.
உள்துறை அமைச்சகம் கடிதம்
இந்நிலையில், கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று 19 ல், அனுப்பிய உத்தரவு கடித விபரம்:சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஐயப்ப பக்தர் குழுக்கள், ஹிந்துஅமைப்புகள், ஜாதி அமைப்புகள், கேரளாவில், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களில், கணிசமான பெண்களும் பங்கேற்றுள்ளனர். அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகாவிலும், ஹிந்து அமைப்புகள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி உள்ளன.
இதனால், பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற் கொள்ள வேண்டும். அசம்பாவிதங்கள் நடக்காத வகையில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகள் பரவாமல் தடுக்க, கவனத்துடன் செயல்பட வேண்டும். தேவையான தடை உத்தரவுகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.