பதிவு செய்த நாள்
20
அக்
2018
01:10
சென்னிமலை: சென்னிமலையில், நவராத்திரி விழா இறுதி நாளில், முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சென்று, சூரனை வதம் செய்தார்.
நவராத்திரியை முன்னிட்டு, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், கடந்த ஒன்பது நாட்களாக, கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரியின், 10வது நாளான, நேற்று 19 ல் விஜயதசமியை ஒட்டி, அம்புசேர்வை நிகழ்ச்சி நடந்தது. அசுரனை வதம் செய்ய, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வாள் போன்ற ஆயுதங்களுடன், மாலை, 4:30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார். வள்ளி, தெய்வானை சுவாமிகள் தனி சப்பரத்தில் கொண்டு செல்லப்பட்டது. ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து, பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர். அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவம் தலைமையில், முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதையடுத்து வண்ணாசூரன் என்ற அசுரனை, வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. வாழை மரம் உருவத்தில் இருந்த வண்ணாசூரனை வில், அம்பு, வாள் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்த முத்துக்குமார சுவாமி, வண்ணாசூரனை மூன்று முறை வலம் வந்து, தம்பதி சமேதராக மீண்டும் கைலாசநாதர் கோவிலை அடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.