விருதுநகரில் நவராத்திரி அம்பு எய்யும் விழா புலி வேடமிட்டு ஊர்வலமாக வந்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2018 03:10
விருதுநகர்: விருதுநகரில் நவராத்திரி விழாவையொட்டி சுவாமிகள் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நவராத்திரி விழாவைதொடர்ந்து விஜயதசமியான நேற்று (அக்., 19ல்) விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி, மதுரை ரோடு தேவஸ்போர்டு நந்தவனத்தில் சொக்கநாதர், சந்திர சேகரராக அவதாரமெடுத்து மக்களின் நலன் காக்க அரக்கனை அழிக்க அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக காலை 8:00 மணிக்கு தங்க முலாம் பூசிய தேரில் சொக்கநாதர் சந்திரசேகரராக எழுந்தருள ஊர்வலமாக வந்து மதுரை ரோடு நந்தவனத்தை அடைந்தார்.அங்கு 9:30 மணிக்கு சுவாமி அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அந்தந்த பகுதி கோயிலிருந்து புலிவேடமணிந்த பக்தர்கள் முன் செல்ல சிலம்பம், களரி போன்ற வீர விளையாட்டுகளுடன் மக்கள் ஊர்வலமாக வந்து நந்தவனத்தில் சுவாமியை வழிபட்டனர்.
இது போல் மாலையில் விருதுநகர் வெயிலுகந்தம்மன் சுப்பிரமணிய சுவாமி, ரெங்கநாத சுவாமி வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து கே.வி. எஸ். பள்ளி அருகே தேவஸ் போர்டு நந்தவனத்தில் ஒன்றுகூட அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கு பக்தர்களுக்கு சுவாமிகள், அம்மன் அருள் பாலித்தனர்.
இதை தொடர்ந்து இரவு 8:00 சுவாமிகள் கோயில்களுக்கு திரும்பினர்.இதையொட்டியும் புலி வேடமணிந்தவர்களுடன் பக்தர்கள் வலம் பக்தர்கள் ஊர் வலமாக வந்து வழிபட்டனர். இதன் பின் பக்தர்கள் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் ஒன்று திரண்டனர்.