பதிவு செய்த நாள்
20
அக்
2018
04:10
பட்டிவீரன்பட்டி: சங்க இலக்கியம், பண்டைய காலங்களில் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் எனப்படும் நடுகற்களை, சித்தரேவு பகுதி நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பழங்காலத்தில் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்லை, வீரக்கற்கள் என்பர். உலகின் பல பகுதிகளிலும் இவ்வழக்கம் இருந்துள்ளது. நமது நாட்டிலும் தமிழகத்தில் நடுகல் எடுக்கும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னிவாடி ஜமீனுக்கு உட்பட்ட சித்தரேவு, அய்யம்பாளையம் பகுதிகளில் ஏராளமான நடுகற்கள் எழுப்பபட்டு உள்ளன. இவற்றை பொதுமக்கள் கண்டும், காணாமல் விட்டு விட்டனர்.
நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, வரலாற்று ஆசிரியர் கருப்பையா தலைமையில் மாணவர்கள் ரெங்கராஜபுரம், நெல்லூர் தாமரைக்குளம் கரையில் இருப்பவை நடுகற்கள் என அடையாளம் கண்டனர்.
கற்களின் அமைப்பு: தாமரைக்குளத்தில் உள்ள கல் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் பிரிவில் இரண்டு வீரர்கள் வாள் பிடித்து நின்றும், அவர்கள் அருகில் மூன்று பெண்கள் உடன்கட்டை உயிர் நீத்த அடையாளத்துடன் உள்ளனர். இரண்டாவது பிரிவில் 5 வீரர்கள் வாளுடன் நின்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நாயக்கர் கால கொண்டை அமைப்பு காணப்படுகிறது.
ரெங்கராஜபுரம் நடுகல் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிலும் வாள், கம்புடன் வீரர்கள், தண்டை, நீர்குவளையுடன் பெண்கள் உள்ளனர். கன்னிவாடி ஜமீன் ஆட்சியில் தாமரைக் குளத்து நீரை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க நடந்த சண்டயில் வீரர்கள் இறந்துள்ளனர். அவர்கள் இறந்த பின் மனைவியரும் உடன் கட்டை ஏறி உயிர் துறந்து உள்ளனர்.
அவர்களின் நினைவாக நடுகல் எழுப்பபட்டு உள்ளது என, தேனி மாவட்டம் போடி, சி.பி.ஏ., கல்லூரி பேராசிரியர் மாணிக்கராஜ், கனகராஜ், தொல்லியல் துறை மாணவர் ராம்குமார் துணையுடன் விளக்கினார்.
பேராசிரியர் மாணிக்க ராஜ் கூறுகையில், இப்பகுதியில் ஏற்கனவே வட்ட எழுத்துக்கள், பாறை ஓவியங்கள், வாள் கிடைத்தன. தற்போது நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அரசு இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.