பதிவு செய்த நாள்
21
அக்
2018
02:10
திருப்பூர்: மங்கலம், அக்ரஹாரபுத்துார் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகாரணப்பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது.அக்ரஹாரபுத்துார் மற்றும் வேட்டுவபாளையம் பகுதிகளில் உள்ள, காரணப்பெருமாள் கோவிலில், நேற்று, திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, கொண்டி தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி இறக்குதல், கன்னிமார் பூஜைகள் நடந்தன. புத்துார் கோவிலில் இருந்து, தாயார்களுக்கு பிறந்த வீட்டு சீர் எடுத்துச்செல்லப்பட்டது. நேற்று காலை, எம்பெருமாள் மற்றும் தாயார்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. காரமடை ரங்கநாத சுவாமி கோவில் பட்டாச்சாரியார் திருமலை நல்லான் சக்கரவர்த்தி சர்வசாதத்துடன், யாகசாலை பூஜை, திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, பெருமாள் மற்றும் தாயார் உற்சவர்கள் புத்துார் நொய்யல் ஆற்றங்கரைக்கு எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடக்கும். ஆற்றங்கரையில், உச்சிபூஜை, கவால பூஜையை தொடர்ந்து, ஊர்வலமும், சிறப்பு பூஜையும் நடக்கும். உற்சவமூர்த்திகள், வேட்டுவபாளையம் கோவிலுக்கு சென்றடைந்ததும், கவால பூஜையும், வான வேடிக்கையும் நடக்கிறது.