பதிவு செய்த நாள்
21
அக்
2018
02:10
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், தியாகராஜர் உற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நவராத்திரி திருவிழா நிறைவு பெற்றது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நவராத்திரி திருவிழா, அக்., 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, தபசு அலங்கராத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் எட்டு நாட்களும், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மஹிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி அலங்காரங்களில், அம்மன், மாடவீதி உலா நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, தியாகராஜர் மாடவீதி உற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நவராத்திரி திருவிழா நிறைவு பெற்றது.