பதிவு செய்த நாள்
23
அக்
2018
12:10
சபரிமலைக்கு பெண்கள் வந்தால், கோவில் நடையை அடைத்து விடுவேன்’ என்று அறிவித்த சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு ரா ஜீவரருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ‘ சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம்’ என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சாதகமாக பயன்படுத்தி, திடீர் போராளிகளாக உருவெடுத்த பெண்கள் சிலர், சபரிமலை கோவிலுக்கு செல்ல முயற்சித்தனர்.
பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அவர்கள் திரும்பிச் செல்ல நேரிட்டது. இந்த பிரச்னையால், ஐயப்பன் சன்னிதானத்தில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது. ‘பெண்கள் சிலர் சபரிமலை வரலாம்’ என்கிற நிலையில், இது குறித்து சபரிமலை கோவில் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறுகையில், ‘‘அய்யப்பன் கோவிலுக்கு, பெண்கள் பதினெட்டு படியேறி வந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவேன்,’’என்று துணிச்சலாக அறிவித்தார். கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரருவின் தைரியமான இந்த அறிவிப்புக்கு, சமூகவலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ‘இந்து மதம் காக்க வந்த மகான்’ என்றும்,‘உங்களை போன்றவர்களின் செயல்களால் தான், இந்து மதம் வாழ்வாங்கு வாழும்’என்றும், பக்தர்கள், சமூகவலை தளங்களில் கண்டரரு ராஜீவரருவை பாராட்டி வருகின்றனர்.