பதிவு செய்த நாள்
29
அக்
2018
11:10
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் 8ம் தேதி துவங்கவுள்ள கந்த சஷ்டி விழாவிற்கு, சூரன் பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற, கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, மாசி பிரமோற்சவத்தின் போது, வள்ளி திருக்கல்யாண உற்சவமும், கந்த சஷ்டி விழா நிறைவில் தெய் வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்தாண்டு, கந்த சஷ்டி வைபவம், நவம்பர் 8ல் துவங்குகிறது. தினசரி கந்த பெருமான் வள்ளி, தெய்வானையருடன் வீதி உலா வைபவம் காலை, இரவு நேரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதான, சூரசம்ஹார விழா, 13ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது.
அன்றைய தினம், மாவட்ட உள்ளூர் அரசு விடுமுறை என்பதால், ஏராளமான பக்தர்கள் கூடுவர். சிறப்பு மிக்க இவ்விழா, இவ்வூரில் கெஜமுகன், சிங்கமுகன், பானுகோபன், அகிமுகி, தாடுகன், சூரபத்மன் ஆகிய, ஆறு அசுரர்களின் முழு உருவ பொம்மைகள் தயாரிப்பு பணி மும்மரமாக நடந்து வருகிறது. காகித கூழ், மூங்கில் ஆகியவற்றை பயன்படுத்தி, அசுரன் பொம்மைகள் செய்யும் பணி, புதுச்சேரி குழுவினரால், ஒரு வாரமாக மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என, கோவில் நிர்வாகத்தினர் கூறினர். இதே போன்று சிறுவர்கள் வீரபாகு வேடமணிந்து அசுரர்களை போரிட காகித அட்டை வேல், வீரபாகு கலசங்கள் தயாரிக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு பிரச்னை வராது: கடந்த ஆண்டு அசுரன் பொம்மைகள் வெளியூரிலிருந்து இரும்பு சட்டத்தால் தயாரித்து எடுத்து வரப்பட்டது. எடை அதிக கூடுதலாக இருந்ததால் அசூரன் பொம்மைகள் ஊர்வலம் வருதலில் சிரமம் காணப்பட்டது. இதன் காரணமாக, அசூரன் பொம்மைகளை வைத்து ஆடுவோர் புகார் தெரிவித்தனர். அப்போது கோவில் நிர்வாகத்தினர். எதிர் வரும் காலங்களில் கோவிலில் அசூரன் பொம்மைகள் தயாரிக்கப்படும் என தெரிவித்தனர். அதன் படி, இந்தாண்டு கோவில் வளாகத்திலேயே, காகிதத்தால், அசூரன் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.