பதிவு செய்த நாள்
29
அக்
2018
12:10
குளித்தலை: இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில், பொது மக்கள் வீடு கட்டியுள்ள வீடுகள், வணிக வளாகங்களை, மாநில உதவி நிலவரி திட்ட அலுவலர் ஆய்வு செய்தார்.
குளித்தலை கடம்பர்கோவில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், சுங்ககேட் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் அப்பகுதி பொது மக்கள் வீடுகள் கட்டி குடியிருக்கின்றனர். மேலும், வணிக வளாகம், ஓட்டல், விடுதிகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். தாங்கள் குடியிருக்கும் வீடு மற்றும் வணிக வளாகத்திற்கு பட்டா வழங்கவேண்டும் என, பொது மக்கள் சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், கோவில் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பொதுமக்கள் சார்பில், மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்., 27ல்) மாலை, உதவி நிலவரி திட்ட அலுவலர் ஆனந்தி தலைமையில், கோவில் இ.ஒ., வேல்முருகன், சீனிவாசன், குளித்தலை நெடுஞ்சாலை தனி தாசில்தார் யசோதா முன்னிலையில் அப்பகுதியில் ஆய்வு செய்தார். தலைமை சர்வேயர் தலைமையில், தாலுகா சர்வேயர், ஆர்.ஐ., உள்ளிட்ட அதிகாரிகள், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவிட்டனர்.