பதிவு செய்த நாள்
29
அக்
2018
12:10
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (அக்., 28ல்) காலை விமரிசையாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூரில், கடந்த, 1965ல், விமோ சனாந்த குருமகராஜ் என்பவரால், இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டது. இக்கோவில் தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோவில் என, கூறப்படுகிறது.
இக்கோவிலில் தற்போது புதிதாக கருங்கல் கருவறை, கன்னி மூல கணபதி சன்னதி அமைக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா, கடந்த, 24ல், விக்னேஷ்வர பூஜை, பவுர்ணமி பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று (அக்., 28ல்) காலை, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. காலை, 7:40 மணிக்கு, கோபுர காலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.