பதிவு செய்த நாள்
31
அக்
2018
12:10
சென்னிமலை: சென்னிமலை அருகே, மழை வேண்டி, கோவில்களில் அரிசி, சர்க்கரை வைத்து, சுவாமிக்கு மக்கள் பூஜை செய்தனர். சென்னிமலை அருகேயுள்ள, புதுவலசு மற்றும் தட்டாரவலசு பகுதி, விவசாயத்தை நம்பியுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இப்பகுதி மக்கள், நல்லபாளியை சேர்ந்த மக்களுடன் ஒன்று கூடி, விரதம் இருப்பர். மழைக்காக அரிசி பூஜை நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று (அக்., 30ல்) காலை, புதுவலசு பிள்ளையார் கோவிலில், அரிசி வைத்து பூஜை செய்தனர். அங்கிருந்து அரிசி, நாட்டு சர்க்கரையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட் டனர். தட்டாரவலசு, வண்ணாம்பாறை ஆகிய இடங்களில் உள்ள பிள்ளையார் கோவில், நல்லபாளி சிவ்வந்தீஸ்வரர், ஆண்டாத்தாள் மற்றும் நடுமலை ஆண்டவர் கோவில்களில் வழிபாடு செய்தனர். சென்னிமலையின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள, வருணபகவான் கோவிலுக்கு கரடு, முரடான பாதையில் சென்றனர். அங்கு வழிபாடு செய்தனர். இறுதியாக மலங்காட்டு கருப்பணசாமி கோவிலுக்கு வந்தனர். அங்கு கருப்பணசாமி, கன்னிமார் மற்றும் தன்னாசியப்பனுக்கு அரிசி, நாட்டு சர்க்கரை வைத்து பூஜை செய்தனர். அப்போது சில ஆண், பெண் பக்தர்கள், சாமி வந்து அருள் வாக்கு கூறினர்.