பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
கும்பகோணம்: திருச்சேறை சாரநாதபெருமாள் கோவிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறையில் சாரநாயகி உடனாய சாரநாதபெருமாள் கோவில் உள்ளது. கிரகயுகத்தில் பிரம்மாவாலும், திரேதா யுகத்தில் முனிவர்களாலும், துவாபர யுகத்தில் கருடனாலும் கலியுகத்தில் காவிரித்தாயாராலும் பூஜிக்கப்பட்டவரும், சங்கம், கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்சாயுதங்களுடன் மூலவராகவும், பின்பு பஞ்சலெட்சுமிகளுடன் வைகுண்டத்தில் இருக்கும்படியாக காவிரித்தாயாருக்கு சேவை சாதித்து இத்தலத்தில் வணங்கும் அனைவருக்கும் எல்லா செல்வங்கள் கிடைப்பதாக ஐதீகம். சிறப்புமிக்க இக்கோவிலில் தைப்பூச தேரோட்டம் விமரிசையாக நடப்பது வழக்கம். வைணவத்தலங்களில் தைப்பூச தேரோட்டம் நடைபெறும் ஒரே தலமாக போற்றப்படுகிறது. இவ்வாண்டும் கடந்த மாதம் 30ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூச பெருவிழா தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை பெருமாள், தாயார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. ஒன்பதாம் திருநாளில் காலை 4 மணிக்கு மூலவருக்கு தங்கமுலாம் அங்கி சேவை நடந்தது. தொடர்ந்து காலை 5 மணிக்கு பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தேருக்கு எழுந்தருளினார். அதன்பின் காலை 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார் பங்கேற்று தேரின் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி, பஞ்., தலைவர் வெண்ணிலா, ஒன்றியகவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாரநாதா, சாரநாதா என்று கோஷம் எழுப்பியவாறு தேர் வடம்பிடித்து தேர் இழுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.