பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி, ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், 10 நாட்கள் சிவராத்திரி விழா, வரும் 12ம் தேதி துவங்குகிறது. "ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் சிவபெருமான் அன்னை பார்வதியின் மடியில் தலை வைத்து உறங்கும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது. பள்ளிகொண்டேஸ்வரர் என பெயர் கொண்ட இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில், சிவராத்திரி விழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டின், சிவராத்திரி விழா, 12ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெற உள்ளன. முதல் நாள் காலை விநாயகர் பூஜை, கிராம தேவதைக்கு சிறப்பு பூஜை, யாகசாலை பூஜையும், இரவு 7 மணிக்கு, உற்சவர் பல்லக்கில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஒவ்வொரு நாளும் காலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் சந்திர பிரபை, காமதேனு வாகனம், பூத வாகனம், அதிகார நந்தி, கஜ வாகனம், அஸ்வ வாகனம், விருஷப வாகனம் என உற்சவர் கோவிலை வலம் வருவார்.
வரும், 20ம் தேதி மாலை, 6 மணிக்கு முதல் கால யாக பூஜை, இரவு, 9 மணிக்கு, 2 வது காலை யாக பூஜை, நள்ளிரவு, 12 மணிக்கு, 3வது கால யாக பூஜையும், மறுநாள் விடியற்காலை, 4 மணிக்கு, 4 வது கால யாக பூஜையும் நடைபெறும். வரும், 21ம் தேதி காலை சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு உற்சவர் கல்பவிருஷ வாகனத்தில் எழுந்தருள்வார். நிறைவு நாளான, 22ம் தேதி காலை, 7 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம், மாலை, உற்சவர், ராவண பிரம்ஹா வாகனத்தில் எழுந்தருள்வார். விழாவிற்கான ஏற்பாடுகளை, உற்சவ கமிட்டி தலைவர் முனிசேகர் ரெட்டி, மேனேஜர் முனிகிருஷ்ணய்யா செய்து வருகின்றனர்.