பதிவு செய்த நாள்
01
நவ
2018
12:11
தலைவாசல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி, ஈசான சிவாஷ்டமியாக கொண்டாடப் படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், நேற்று (அக்., 31ல்) காலை பால், தயிர் உள்ளிட்ட ஐந்து வகை பொருட்களால், மூலவருக்கு, பூஜை, அபிஷேகம் நடந்தது.
ஐந்து வகை எண்ணெயால் பஞ்சதீபமேற்றி, பைரவருக்கு உகந்த செவ்வரளிப்பூவை வைத்து, பக்தர்கள் வழிபட்டனர். எட்டு பைரவர்களுக்கு, தனித்தனியாக வழிபாடு நடந்தது. காமநாதீஸ் வரர், பெரிய நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். மஹா தீபாராதனை, யாகங்களில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, சிறப்பு பூஜை செய்து, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களிலிருந்த புனிதநீரால், பைரவருக்கு சிறப்பு
அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருநீறு, செவ்வரளிப் பூக்களால் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.
* ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத்திலுள்ள, பிரித்தியங் கிராதேவி அம்மனுக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிரித்தியங்கிராதேவி, சொர்ண பைரவர், வெள்ளி கவசம்,
புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.