பதிவு செய்த நாள்
08
நவ
2018
02:11
கிருஷ்ணகிரி: கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கேதார கவுரி விரதம் என்பது கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பிரியாமல், இறுதி வரை மகிழ்வுடன் வாழ கடைபிடிக்கும், நோன்பாகும். தீபாவளிக்கு மறுநாள், கலச வடிவிலோ, மண்ணால் செய்யப்பட்ட உருவத்திலோ, சிவபெருமானை, தொடர்ந்து, 21 நாட்களுக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட வேண்டும். நேற்று, கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து, நோன்பை நிறைவு செய்தனர். இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
* நேற்று (நவம்., 7ல்), தர்மபுரி நெசவாளர் காலனி வேல்முருகன் கோவில் வளாகத்தில் உள்ள மாரியம்மனை, திரளான பெண்கள் வழிபட்டனர். இதேபோல், பிடமனேரி மாரியம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், கோட்டை கல்யாணகாமாட்சி அம்மன் கோவில்களில், நேற்று திரளான பெண்கள் வழிபாடு நடத்தினர்.