பதிவு செய்த நாள்
08
நவ
2018
05:11
இயற்கையின் அழகை அதனிடத்தில் நின்று ரசிப்பதும். அதன் பிரம்மாண்டங்களை அதனுடைய விளிம்புகளில் நின்று வியப்பதும், ஒரு மிக முக்கிய தவப்பயிற்சி. மூச்சைப்பிடித்து, உடல் வளைத்து செய்யும் யோகாசனங்களைப்போலவே, மூச்சு வாங்க, நெடுந்துயர்ந்த மலைக்காடுகளின் பாதையுனூடே பயணிப்பதும் நிச்சயம் யோகப்பயிற்சியும் கூட. அப்படியான மலைப்பயணத்தில், நடு நடுவில், ஓடும் ஓடையைக் கடக்கையிலே, சில்லிட்டு விறைக்கும் பாதங்களை பொருட்படுத்தது, முன்குனிந்து ஓடிவரும் அந்த சுனை நீரை கைகளில் ஏந்தி அருந்துவதும்கூட கொடுநோய்கள் பல போக்கும் அமிழ்தம். இதுவரை கேட்டிராத ஏதேதோ இசையை வண்டுகளும், அதற்கு இசப்பாட்டுடன் பறவைகளும், ரீங்காரமிட, அவ்விசையைத் தேடி ஓடி வரும் விண்ணின் குழந்தைகளாய் நெடிந்துயர்ந்த அடர்ந்த மரங்களூடே ஓடிவரும் சூரியக்கற்றைகள் என மலைப்பயணங்கள் ஏதேதோ உள்ளப்பிரவாகத்தை தரும்.
இயற்கையின் இந்த பிரம்மாண்ட அழகியல் கூறுகளுடன் அவசியம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் உறவாடி வர வேண்டும். அகம் நசுங்கி அழியவும், அகமகிழ்வு பொங்கிப்பெருகிடவும் மலைகள் கற்றுக்கொடுக்கும். குமாயுங் காடுகளின் ஜாகேஷ்வர் பயணமும் எனக்கு அப்படித்தான் இருந்தது பயணித்து பாருங்கள் உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.
காதலை வெளிப்படுத்தும் கணத்தில் பொங்கும் பரவச நிலையை, எதிர்பாராத முத்தம் கிடைத்த பொழுதில் ஊற்றெடுக்கும் மகிழ்வு நிலையை, ஈரக்காற்று ஒன்று இதமாய் வருடிச்செல்லும் போது ஏற்படும் இளக்க நிலையை, உடைந்து நிற்கையில் "நானிருக்கேண்டா" என அரவணைக்கும் தோழமையை, என என்னென்னவோ நிலையை விரிந்த மலைக்காடுகள் எப்போதும் காட்டிக்கொண்டே உள்ளன.
அதன் ஒவ்வொரு அழகியல் அசைவையும் படம்பிடிக்க படம் பிடிக்க அலுக்கவே இல்லை ரொம்ப துாரத்தில் இருந்து வந்திருக்கிறான் என் ஜாகேஷ்வர் கோபுரங்களும்,தருகாவனத்து தேவதாரு மரங்களும்,பழமை மாறாத கட்டிடங்களும்,வானமும்,இமயமும் கூடுதல் அழகுடனே எனக்கு காட்சி தந்தது அதை இயற்கையின் இமயத்தின் ஆசீர்வாதமாகவே எடுத்துக்கொண்டேன்.
23 வருடமாக இங்கே சென்றுவரும் இசைக்கவி ரமணனின் செல்வாக்கும் சொல்வாக்கும் இந்த ஊர் மக்களின் அன்பி்ல் தெரிகிறது தெரிக்கிறது.ஜாகேஷ்வரில் தங்கியிருந்த மூன்று நாட்களும் ஜாகேஷ்வரை தொட்டு கைப்பட பூஜித்து சந்தனம் பால் தயிர் தேனால் அபிேஷகம் செய்வித்து மகிழ்ந்தோம் அதே போல புஷ்டிமாதா ஆலயத்தில் குங்குமஅர்ச்சனையையும் நாமே செய்து மகிழ்ந்தோம்.
இப்படி இறைவனை தொட்டு தழுவி கசியும் கண்ணீருடன் துயரத்தை இறக்கவைத்து அழிவில்லா ஆன்மீக ஆனந்தத்தை நமக்குள் ஊற்றுவிக்கும் இறை ஆனந்தத்தை ரமணன் ஏற்பாடு செய்துதந்தார் என்றால் அவரது மனைவி அனு இயற்கையை அதன் இனிமையுடன் அறிமுகம் செய்துகொண்டே இருந்தார் இதோ பாருங்கள் நமது முருகப்பெருமான் வேல் மயிலுடன் சிற்பமாக இருப்பதை இந்த இரட்டை தேவதாரு மரம் போல இன்னோன்று இல்லை என்றெல்லாம் சொல்லிவியக்கவைத்தார்.
அதிகாலை ஐந்து மணிக்கு சூடாய் ஜாங்கிரியும் டீ,அளவாய் அழகாய் திருநீறு பூசுவதெல்லாம் உங்கள் ஊரில் வைத்துக்கொள்ளுங்கள் இங்கே வந்தால் இப்படித்தான் என நெற்றி நிறைய தேவதாரு கட்டையில் சந்தனம் போல உருவாக்கிய கலவையை நெற்றி நிறைய பூசி நடுவில் குங்கும கீற்று ஏற்றி நெற்றியை நிறக்கச் செய்தே கோவிலுக்குள் அனுமதிப்பது,நெட்வொர்க் இல்லாமல் இருப்பது,குடிக்கும் டீக்கு கொடுப்பதை வாங்கிக்கொள்வது,எதை வேண்டுமானாலும் படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுமதிப்பது,இது என் தேசம் என் மண் என்ற உணர்வுடன் உறவாய் நட்பாய் உயிராய் பழகும் வாகனஒட்டிகள் என்று பல புதிய அனுபவங்கள் கிடைத்தன.
சமுவா எனும் பள்ளத்தாக்கு ஒன்றே போதும் பயணத்திற்கு மன நிறைவை தர அஸ்தமன நேரத்தில் இங்கு இருந்துவிட்டால் அது சுகம் அதுவே சொர்க்கம் வானம் மஞ்சள் ஆரஞ்சு இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் நிமிடத்திற்கு ஒரு முறை மாறி அந்த வண்ணத்தை இமயமலையின் மீது வாரி இறைக்க அந்த ஒளியி்னை உள்வாங்கி இமயம் பிரதிபலிக்க இமயத்தின் குன்றுகள் தேனிலும் சந்ததனத்திலும் பாலிலுமான அபிேஷகம் குளிப்பு பார்க்கும் பலருக்கோ எல்லையற்ற களிப்பு, நமக்கும் அந்த இமய உச்சிக்கும் இடையே சில நூறு கிமீட்டர் இருந்தாலும், அந்த நிமிடங்களில் அவை நம்மை நெருங்கிவந்து உச்சி மோர்ந்து நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வாதிப்பது போல அப்படி ஒரு ஜில்லிட வைக்கும் சிலாகிப்பு எழுகிறது.இன்னும் என்ன சொல்வது எப்படிச் சொல்வது ஒன்றும் சொல்லத்தோன்றாமல் ஈஸ்வரா என்று மட்டுமே சொல்லத்தோன்றியது.
இமயத்தே ஒரு மூலையிலே
எழிலே கொழிக்கும் மடியினிலே
இருளே மிரளும் இருளினிலே
ஈரம் மாறாப் பனியினிலே
உமையாள் கலந்த ஓரொளியாய்
உலகம் அனைத்தும் ஊடுருவி
உயிரின் முனையில் உட்கார்ந்தே
உதட்டை விரித்துச் சிரித்தாயே!!
குமைவுகள் தணிய லிங்கத்தைக்
கோணல் தலையால் முட்டுங்கால்
கோவே! என்னென் றெழுந்தாயே!
குடலே நடுங்க நின்றாயே!
இமைகளுக் குள்ளே நான்கண்ட
இன்பப் புயலை என்சொல்வேன்!
இதயம் ஆளும் ஜாகேசா! நான்
என்றும் உனதே உயிர் நேசா!
எத்தனை தான் நான் இழிந்தாலும்
ஏற்ற ஏற்ற விழுந்தாலும்
என்னை ஒருகணம் பிரியாமல்
என்றும் காக்கும் மன்னவனே!
பித்தன் என்றே சுந்தரனார்
பேசிய சொல்லும் சரிதானே!!
பின் வரும் வினையெனைத் தீண்டாமல்
பேணும் கடவுள் நீதானே!
சொத்தும் சுகமும் சிவனடியே
சொல்லெனின் அதுநம் தமிழ்ச்சொல்லே!
சுந்தரி அணந்த சுந்தரியைத்
துதிப்ப தொன்றே என் கடனே!
அத்தா! அன்பா! ஜாகேசா! நான்
அடிமை உனக்கே ஜாகேசா!
அந்த தாருக வனத்தினிலே
அனைத்தும் முடித்தாய் என்னீசா!
(கட்டுரைக்கு உதவிய இசைக்கவி ரமணன் மற்றும் சித்த மருத்துவர் கு.சிவராமன் ஆகியோருக்கு நன்றி)
எப்படி போவது எப்போது போவது...
எங்கு இருந்தாலும் ரயில் அல்லது விமானம் மூலம் டில்லி வந்தடைய வேண்டும்.டில்லி ரயில் நிலையத்தில் இருந்து காத்கோடம் என்ற இடத்திற்கு மூன்று ரயில்கள் இயங்குகின்றன.இதில் இரவு நேர ரயில் உகந்தது.படுத்தால் விடியும் போது வரும் கடைசி நிறுத்தம் காத்கோடம்தான்.அங்கு இருந்து பட்ஜெட்டைப் பொறுத்து கார் ஜீப் பஸ் மூலமாக ஜாகேஷ்வரை ஐந்து மணி நேரத்தில் விடியலின் வெளிச்ச அழகில் ஊரை பார்த்துக் கொண்டே சென்றடையலாம். வழியில் இமயத்தின் அழகையும் ஆசை தீர பார்த்து ரசித்து தரிசித்து செல்லலாம்.
ஜாகேஷ்வரைப் பொறுத்தவரை குளிர், மிதமான குளிர், கடுமையான குளிர்காலம்தான்.கடுமையாக குளிர் நிலவும் டிசம்பர் ஜனவரி மாதம் தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.எப்போது சென்றாலும் ஸ்வெட்டர் சால்வை கம்பளி குல்லாவுடன் கதகதப்பைதரும் ‛தெர்மல்’ உள்ளாடைகளும் வாங்கிக்கொண்டு செல்வது நல்லது.அந்தக்குளிரும் ஒரு சுகானுபவமாகவே இருக்கும்.குளிர் காரணமாக மாலை 6 மணிக்கு கோயில் நடையை சாத்திவிடுவர், கடைகளை பூட்டிவிடுவர். ஊரே ஏழு மணிக்கு அடங்கிவிடும்,நெட்வொர்க் கிடைப்பது சிரமம் என்பதால் மொபைலில் இருந்தும் அது தரும் சிரமங்களில் இருந்தும் விடுதலை ,ஆன்மீகம் தொடர்பாக நிறைய பேசலாம் மனம்விட்டு பாடலாம்.
23 வருடங்களில் 23 முறை
சென்னையைச் சேர்ந்தவர் இசைக்கவி ரமணன்.பல்வேறு தலைப்புகளி்ல் மிக ஆழமாக இலக்கிய ரசனையுடன் பேசக்கூடியவர் அருமையாக கவிதை இயற்றி பாடக்கூடியவர்.இவரது பாரதி யார்? நாடகம் உலகப்பிரசித்தம்.இமய மலை மீது அதீத பற்றும் பாசமும் கொண்டவர்.இமயமலைக்கு இதுவரை 33 முறை சென்றுள்ளார் இதில் கடந்த 23 வருடங்களில் ஜாகேஷ்வர் கோவிலுக்கு மட்டும் 23 முறை தனது மனைவி அனுராதாவுடன் சென்றுள்ளார்.ஒவ்வொரு முறை செல்லும் போதும் விருப்பம் உள்ள பக்தர்களை அழைத்துச் சென்று ஜாகேஷ்வர் அருள் பெறச்செய்பவர்.ஜாகேஷ்வர் பார்க்க உங்களுக்கு விருப்பம் என்றால் இவரை தொடர்பு கொள்ளவும் எண்:9940533603.
-எல்.முருகராஜ்.