பதிவு செய்த நாள்
09
நவ
2018
11:11
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. முதலில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், காப்பு கட்டப்பட்டது. தினமும் இரவு 7:00 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் சென்று அருள்பாலிப்பார். நவ.,12ல் வேல் வாங்குதல், 13ல் சூரசம்ஹாரம், 14ல் சட்டத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கும். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் சஷ்டி திருவிழா துவங்கும் வகையில் நேற்று மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், உற்ஸவருக்கு சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை நடந்தது.
அலங்காநல்லுார்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி பூஜை துவங்கியது. நேற்று காலையில் பக்தர் களுக்கு காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. பின் உற்ஸவருக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி அன்னவாகனத்தில் எழுந்தருளினர். முன்னதாக மூலவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, சண்முகார்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(நவ.,9) காலை சுவாமி காமதேனு வாகனம், 10ல் யானை, 11ல் ஆட்டு கிடாய், 12ல் சப்பர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நவ.,13ல் சூரசம்ஹார விழா குதிரை வாகன புறப்பாடுடன் நடக்கிறது. அன்று மாலை 4:35 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெறும். பின் 5:40 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.நவ.,14 திருக்கல்யாண உற்ஸவம், மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் மஞ்சள் நீர் உற்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்து வருகின்றனர்.