பதிவு செய்த நாள்
09
நவ
2018
11:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, கந்தசஷ்டி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, நேற்று முன்தினம் யாக சாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று, முதல் நாளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணிக்கு நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு தங்க கவச அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.காலை, 8:00 மணி முதல், காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை, மாலை, 5:00 மணி வரை நடந்தது.நிகழ்ச்சியில் அரக்கோணம், எம்.பி., அரி, கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இந்த லட்சார்ச்சனை விழா, காலை, 8:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை தினமும் நடக்கிறது.வரும், 13ம் தேதி, மாலை, உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனை நடக்கிறது. இம்மாதம், 14ம் தேதி, நண்பகல், 11:00 மணிக்கு, உற்சவருக்கு, திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.இதே போல், திருத்தணி, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலிலும், கந்தசஷ்டி விழாவையொட்டி, மூலவருக்கு தினமும். காலை, 8:00 மணிக்கு, புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.