பதிவு செய்த நாள்
09
நவ
2018
12:11
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா நேற்று துவங்கியது.முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூசத்திருவிழா மற்றும் கந்தசஷ்டி திருவிழாக்கள், பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்.இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா, காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று, காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.காலை, 6:00 மணிக்கு பால், தயிர், நெய், தேன் போன்ற 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. காலை, 7:45 மணிக்கு உஷக்கால பூஜையும், விநாயகருக்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு, மூலவர், விநாயகர், வீரபாகு, சூலத்தேவர், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.அதன்பிறகு, கந்தசஷ்டி விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. வரும், 14ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும், யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 13ம் தேதி பகல், 2:45 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நேற்றைய விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.