பதிவு செய்த நாள்
09
நவ
2018
01:11
தேனி:தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நேற்று (நவம்., 8ல்) துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேனி பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்தபெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கி கந்த சஷ்டி கவசம் பாடினார்.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தக்கார் அண்ணாதுரை தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகனுக்கு கலச சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இன்று முதல் நவ.14 வரைதினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
* போடி பரமசிவன் கோயிலில் உள்ள முருகன், அக்ரஹார விநாயகர் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தன.
கூடலூர்: கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 21 வது ஆண்டு கந்த சஷ்டி விழா துவங்கியது. சுவாமிக்கு பால் அபிேஷகம் , தீபாராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீகக்கூட்டு வழிபாடு நிகழ்ச்சியைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
அபிேஷகப்பால், மாவு மற்றும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து
பாதயாத்திரை குழுவினர் பஜனைப் பாடல்கள் பாடினர்.
* ஆண்டிபட்டி:சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் முருக பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர்.டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டி கந்த சஷ்டி விழாவை துவக்கினர். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், வடக்கு தெரு காரமடை விநாயகர் கோயில்களில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். நவ.13ல் சுவாமிக்கு பருப்பு நீர் படையல் செய்து பக்தர்கள் விரதத்தை முடித்து, நவ.14ல் அன்னதானத்தில் பங்கேற்பர்.