பதிவு செய்த நாள்
11
நவ
2018
05:11
துாத்துக்குடி:குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசாரா பெருந்திருவிழாவில், இந்த ஆண்டு உண்டியல் காணிக்கை, கடந்த ஆண்டை விட, 38 லட்சம் ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, வெகுசிறப்பாக தசரா திருவிழா நடக்கும் இடம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தான். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காளி உட்பட பல்வேறு வேடமணிந்து கோவிலுக்கு வருவர். அப்படி வேடமணிபவர்கள், திருவிழா நாட்களில் பிச்சை எடுத்து நேர்ச்சை செலுத்துவர்.
குலசை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில், 13 நிரந்தர உண்டியல்கள் இருக்கின்றன. தசரா திருவிழாவிற்காக, கூடுதலாக, 57 தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. தசரா திருவிழா கடந்த மாதம் நிறைவு பெற்றதை அடுத்து, உண்டியல்் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.உண்டியல்கள் மூலம் காணிக்கையாக, 2.61 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது. அதே போல், வெள்ளி, 2.951கிலோ, தங்கம், 200 கிராம் இருந்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, உண்டியல் காணிக்கை, 38.54 லட்சம் ரூபாய் அதிமாக வசூலாகியிருந்தது