பதிவு செய்த நாள்
12
நவ
2018
02:11
கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், ஆயிரத்து 8 படி பாலாபிஷேகத் துடன் குருபூஜை நடந்தது.வெளிமாநில சாதுக்கள் குவிந்ததால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷ பூஜைகள் நடப்பது வழக்கம். சுவாமியின் மகாசமாதி தினமான, ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டு விழா, கடந்த வாரம் துவங்கியது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்தனர். பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.தீர்த்த, பால் கலசங்களுடன் கிராம விளையாடல், மூலவருக்கு தீர்த்தாபிஷேகம் நடந்தது.
நேற்று (நவம்., 11ல்), மகா யாகம், 1008 படி பாலாபிஷேகம், மலர்ப்பந்தலுடன் மூலவருக்கு விசேஷ மலர் அலங்காரம், உற்சவருக்கு தங்ககிரீட அலங்காரத்துடன் குருபூஜை நடந்தது. சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம் நடந்தது. விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது. வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சாதுக்கள் தீர்த்தாபிஷேகம், குருபூஜையில் பங்கேற்றனர்.
ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மவுனகுரு சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.