பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2019ம் ஆண்டு தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு நேற்று (நவம்., 11ல்) துவங்கியது. முதல் நாளில், 550 பேர் முன்பதிவு செய்தனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லினால் செதுக்கப் பட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும், காலையில் நடை திறக்கப்பட்டு, 1,008 வடைமாலை சாத்தப்படும். பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். இதற்கான செலவு தொகையை, பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர்.
தற்போது ஒரு நாள் அபிஷேக செலவை, ஐந்து பேர் ஏற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நபருக்கு தலா, 6,000 ரூபாய் வீதம், 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான முன்பதிவு நேற்று (நவம்., 11ல்) தொடங்கியது.
கோவில் செயல் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். ஏராளமான பக்தர்கள், காத்திருந்து முன்பதிவு செய்தனர்.இது குறித்து, கோவில் அலுவலர்கள் கூறியதாவது: முதல்நாள்
அன்றே, அடுத்த ஆண்டுக்கான விசேஷ நாட்கள், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களு க்கு முன்பதிவு முடிவடைந்து விட்டது. இதுவரை, 550 பேர் தினசரி அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். இதர நாட்களுக்கு, பக்தர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.