பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
திருச்சி: கேரளா மாநிலத்தில், சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால், சபரிமலையில் பம்பை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. தற்போது, கேரள மாநில அரசு,
பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பார்வையில், சேதமடைந்த பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கார்த்திகை மாதம், சபரிமலையில் விரதகாலம் துவங்க இருப்பதால், புனரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்தனம்திட்டா
மாவட்ட கலெக்டர் அழைப்பின் பேரில், தமிழகத்திலிருந்து, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் தொண்டர்கள், 300 பேர், புனரமைப்பு பணிக்காக கேரளா சென்றுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த சேவா சங்க தொண்டர்கள், 60 பேர், மாவட்ட தொண்டர் படை தலைவர் புஷ்பராஜ் தலைமையில், தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பகுதியில் இருந்து, கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர். ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உட்பட
பலர், அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.