பதிவு செய்த நாள்
13
நவ
2018
12:11
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி விழா, கடந்த 8ம் தேதி முதல் நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி, நேற்று (நவம்., 12ல்) காலை சுப்ரமணிய சுவாமிக்கு பால், தேன், தயிர், மஞ்சள், திருமஞ்சனப்பொடி போன்ற திரவியங்களால் அபிஷேக அலங்காரம் நடந்தது.வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.
இன்று (நவம்., 13ல்) மாலை, சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார பூஜை நடக்கிறது.சுப்ரமணிய சுவாமி சம்ஹாரம் செய்ய உள்ள சூரனின் உருவ பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் நடந்தன.
பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், மாலை, 6:00 மணிக்கு ஜெகதீஸ்வர சிறப்பு வழிபாடு, மற்றும் முருகப்பெருமான் பார்வதி பரமேஸ்வர சுவாமிகளிடம் சக்திவேல் வாங்கும் உற்சவம் நடந்தது.
இன்று (நவம்., 13ல்), மாலை, முருகன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளல், தொடர்ந்து, வீரபாகு தூது அனுப்புதல், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை நவம்., 14ல் மாலை, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பிரசன்ன விநாயகர் கோவில், முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில், ஜஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் கோவில்களிலும், நாளை (நவம்., 14ல்) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.