பதிவு செய்த நாள்
15
நவ
2018
12:11
உடுமலை:உடுமலையில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாய் நடந்தது.உடுமலையில், கந்த சஷ்டி விழா, கடந்த 8ம்தேதி துவங்கியது.
பக்தர்கள், சஷ்டி விரதத்தையும் துவக்கினர். கோவில்களில், நாள்தோறும், சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மயூர வாகனம், ரிஷபம், மயில், யானை, சின்னமயில் வாகனங்களில் திருவீதி உலா நடந்தது.முளைப்பாரி எடுத்தல் கோவில்களில் நடந்தது.
விழா நிறைவாக, சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி, உடுமலையில் பிரசன்ன விநாயகர் கோவில், பாப்பான்குளத்தில், ஞானதண்டாயுதபாணி கோவிலில் நேற்றுமுன்தினம் (நவம்., 13ல்) நடந்தது. சூரனை வதம் செய்த சுப்ரமணிய சுவாமிகளுக்கு, வள்ளி தெய்வானையை மணமுடிக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று (நவம்., 14ல்) நடந்தது.
பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் முத்தைய பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், காலை, 10:30 மணி முதல் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.பக்தர்கள் முருகனை துதித்து, கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம் படித்தனர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு, பட்டு ஆடை உடுத்தி, திருமண அலங்காரம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, பக்தர்களின் அரோகரா, கோஷத்துடன் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை யை மணமுடித்தார்.