பதிவு செய்த நாள்
20
நவ
2018
12:11
மாமல்லபுரம் : தமிழக கோவில் கட்டமைப்புகள், சிலைகள் குறித்து அறிந்தும், கற்றும் பெருமை அடைவதாக, ஜெர்மன் நாட்டு தூதர், கரின் ஸ்டோல், வியப்பு தெரிவித்தார்.
இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக கலை, பண்பாட்டுத்துறை சார்பில், மாமல்ல புரத்தில், உலக பாரம்பரிய வார விழா, நேற்று 19ல் துவங்கியது.விழாவின் சிறப்பு விருந்தி னரான, இந்தியாவிற்கான, ஜெர்மன் நாட்டின் தூதர், கரின் ஸ்டோல் பேசியதாவது:
டில்லியில் நான் பணியாற்றிய போது, வட இந்திய பாரம்பரிய கலாச்சார தொடர்பு, எனக்கு ஏற்பட்டது. சரித்திர, கலை அறிஞரான நான், தமிழக, சோழர் கால கோவில் கட்டமைப்புகள், சிலைகள் பற்றி அறிந்து, கற்று, பெருமையடைகிறேன்.நம் முன்னோரின் மரபு பாரம்பரியத் துடனே, நாம் வாழ்கிறோம். கலாசாரம், பண்பாடு, நம் வாழ்க்கை முறையை மாற்ற இயலாத ஆதாரம். வருங்கால தலைமுறைக்கு, கலாசாரத்தை உணர்த்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட ஆட்சியர், பா.பொன்னையா, பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து, விழிப்புணர்வை வலியுறுத்தினார்.தொல்லியல், சென்னை வட்ட கண்காணிப்பாளர், ஏ.எம்.வி.சுப்பிரமணியம், சென்னை, பாரம்பரிய கல்வி மைய நிறுவனர், சாந்தி பப்பு, மாமல்லபுரம், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர், வி.சேகர் ஆகியோர் பேசினர்.