பதிவு செய்த நாள்
15
பிப்
2012
10:02
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி மூன்றாம் நாள் திருநாளை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறந்து 3 முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. பின், கால பூஜைகள் செய்யப்பட்டு, தங்க கேடயத்தில் சுவாமி, அம்பாள் நான்குரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தனி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் கந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு சாத்தப்பட்ட கோயில் நடை இரவு 10 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்றது.