பதிவு செய்த நாள்
05
டிச
2018
11:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ரத்ன அங்கி சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம், நாளை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் இரு நாட்களில் மட்டுமே, ரத்ன அங்கி சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கார்த்திகை மாதத்தில், தாத தேசிகன் சாற்றுமறை மற்றும் வைகுண்ட ஏகாதசி என, இருநாட்களில் மட்டுமே ரத்னஅங்கி சேவை நடைபெறுகிறது. அதன்படி, கார்த்திகை மாத அனுஷம் நட்சத்திரத்தையொட்டி நாளை தாத தேசிகன் சாற்றுமறை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. இதில், காலை, 9:30 மணிக்கு, பெருமாள், ரத்ன அங்கி கவசம் அணிந்தும், பெருந்தேவி தாயார், கல்இழைத்த திருவபிஷேகம் சாற்றிக்கொண்டும் ஆழ்வார் பிரகாரமாக தேசிகர் சன்னதியை வந்தடைவர்.அங்கு, 12:30 மணி வரை, ரத்னஅங்கி சேவை நடைபெறும். அடுத்த, ரத்ன அங்கி சேவை, டிச., 18ல், வைகுண்ட ஏகாதசியன்று நடைபெறுகிறது.