பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
பொள்ளாச்சி:அமாவாசையை முன்னிட்டு, மாசாணியம்மன் கோவிலுக்கு அதிகளவிலான .பக்தர்கள் ரயிலில் வந்தனர்
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, அமாவாசையன்று நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
பொள்ளாச்சிக்கான ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்ட பின், ரயில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, மாசாணியம்மன் கோவிலுக்கு அமாவாசை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் ரயில்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இன்று (டிசம்., 6ல்) அமாவாசை என்பதால், வெளியூர் பக்தர்கள் நேற்றே ரயில் பயணமாக பொள்ளாச்சி வந்தனர். நேற்று (டிசம்., 5ல்) மதியம், 12:25 மணிக்கு பொள்ளாச்சி வந்த மதுரை - கோவை பயணிகள் ரயிலில், பல்வேறு ஊர்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாசாசாணியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
ரயில்வே ஸ்டேஷனில் இருந்த டவுன் பஸ் மூலம் ஆனைமலை சென்றனர்.பக்தர்கள் கூறுகையில், பஸ்சை விட ரயிலில் கட்டணமும் குறைவு; பயணமும் வசதியாக உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கினால் ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைவர், என்றனர்.மலர்கள் வருகை!மாசாணியம்மன் கோவில் சுற்றுப்பகுதியில் உள்ள பூ வியாபாரிகள், அமாவாசை விற்பனைக்காக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து பூக்களை வாங்கி வருகின்றனர்.
ரயிலில் கொண்டு வரப்பட்ட பூக்கள், பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு கொண்டு சென்றனர்.பூ வியாபாரிகள் கூறுகையில், திண்டுக்கல் மார்க்கெட்டில் பறிக்கப்பட்ட பூக்கள், மாலை தொடுப்பதற்காக வாங்கி வரப்படுகிறது. ரயில் மூலம் பூக்களை கொண்டு வருவது எளிதாகவும், செலவு குறைவாகவும் உள்ளது. இதனால், பக்தர்களுக்கும் குறைவான விலையில் மாலை விற்கப்படும், என்றனர்.