பதிவு செய்த நாள்
06
டிச
2018
05:12
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், உற்சவர் குளக்கரையை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தில் ஆலங்காட்டீசர் சென்றாடு தீர்த்த குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. தெப்பத்தில், உற்சவர் வண்டார் குழலியம்மன் உடனுறை வடாரண்யேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், தெப்பத் திருவிழா நடக்க இருந்தது. ஆனால், குளத்தில் தண்ணீர் இல்லாததால், 12 ஆண்டுகளுக்கு பின், தெப்பத்தில் உற்சவர் வலம் வருவதற்கு பதில், உற்சவர் வண்டார் குழலியம்மன் சமேத வடாரண்யேஸ்வர சுவாமி, சிறப்பு அலங்காரத்தில், குளக்கரையை ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். மேலும், சங்கர்–கணேஷின் இன்னிசை கச்சேரி நடந்தது. 2003 மற்றும் 2006ம் ஆண்டும், சென்றாடு தீர்த்தக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், உற்சவர் குளக்கரையை சுற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.